மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் நாட்டில் வேலை இழப்பு அதிகரித்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் மதுரையில் அளித்த பேட்டி:
மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால், தற்போதைய பொருளாதார சீர்குலைவு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வணிகத்தை குறைத்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆடம்பரமாக விழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டது. நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வர், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது ஆளும் கட்சியினரின் கடமை. அதேபோன்று அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை என்றார்.