உயிரோடு இருக்கும் நபருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்த அரசு மருத்துவமனை!
கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்து விட்டதாகக் கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவர், குடிபோதையில் அவரது மனைவி சாய்ரா பானுவுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது பானுவின் தாயார் ஆதிரா பேகம் குறுக்கே வந்ததில், அவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பாதியிலேயே ஆதிரா பேகம் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
பின்னர், போலீசார் வந்து கேட்கும் போது, ஆதிரா பேகம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதற்கு பதிலாக அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் ரிப்போர்ட் கொடுத்துவிட்டனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் அசோகன் கூறும்போது, 'ஆதிரா பேகம் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறி விட்டார். அதே நேரத்தில் மற்றொரு பெண் ஒருவர் இறந்துவிட, சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது' என்று விளக்கம் தெரிவித்தார்.