பயங்கரவாத ஊடுருவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஜெயகுமார்
தமிழகத்தில் ஊடுருவியுள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெயகுமார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை மாநில அரசு உதாசீனப்படுத்த முடியாது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. தமிழக மக்களை பாதுகாக்க காவல்துறை தயாராக உள்ளது. இந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக போலீஸார் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அனைத்து இடங்களிலும் சோதனைகள் தீவிரமாக நடைபெறுகிறது. எனவே பயங்கரவாத ஊடுருவல் தகவல் தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.