தஞ்சாவூர் பெரியகோயிலை ஹெலிகேம் மூலம் மர்ம நபர்கள் படம் பிடித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் இந்திய தொல்லியல் துறை நினைவு சின்ன உதவியாளர் நடராஜன் வியாழக்கிழமை அளித்த புகார் மனு: தஞ்சாவூர் பெரியகோயிலில் பகல் 11 மணியளவில் ஒரு ஹெலிகேம் கேமராவில் படம் எடுத்துக் கொண்டு பறந்து வந்தது. நானும், விஜயகுமாரும் அதைப் பின் தொடர்ந்து சென்றபோது நுழைவுவாயில் கிழக்குப் பகுதியிலிருந்து புறப்பட்டு, நான்கு புறமும் சுற்றிப் படம் எடுத்துக் கொண்டு தெற்கு திசையில் மறைந்துவிட்டது. அதை இயக்கியவர் யார் எனத் தெரியவில்லை. இந்தியத் தொல்லியல் துறையின் உரிமமோ, முன் அனுமதியோ இன்றி, பெரியகோயிலின் அனைத்துப் பகுதிகளையும் படமெடுத்துச் சென்ற நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.