உதகையில் வாகன நிறுத்தத்துக்காக 1.5 ஏக்கர் நிலத்தை வழங்க தயாராக இருப்பதாக தனியார் கிளப் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மெட்ராஸ் ரேஸ் ஹவுஸ் என்ற தனியார் கிளப்புக்கு உதகையில் கடந்த 1979-ஆம் ஆண்டு 54.74 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. உதகை பேருந்து நிலையம் அருகே இந்த இடம் உள்ளது. இந்த இடத்தில் கோடைக் காலங்களில் குதிரைப் பந்தயம் நடைபெறும். இந்த நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகன நிறுத்தத்துக்காக 4 ஏக்கர் நிலத்தைத் திரும்ப தரக் கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் தனியார் கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தனியார் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகரின் முக்கிய பகுதியில் குதிரைப் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொண்டு வேறு பகுதியில் மாற்று இடம் வழங்கினால் என்ன என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் கிளப் சார்பில், வாகன நிறுத்தத்துக்காக 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகம் இந்த 1.5 ஏக்கர் நிலத்தை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மனுதாரரான தனியார் கிளப்புக்கு மாற்று இடம் வழங்க நெடுகுலா பகுதியில் 52 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிலத்தை தனியார் கிளப் நிர்வாகம் ஆய்வு செய்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.