வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது
இதுகுறித்து விரைவுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி அதிநவீன மிதவைப் பேருந்துகள், இருக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் என 200 சிறப்புப் பேருந்துகள், ஆகஸ்ட் 25 (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் 10 வரையிலான 16 நாள்களுக்கு திருவிழா நடைபெறும் வரையில் இயக்கப்படவுள்ளன.
பயணிகளின் வசதிக்காக நடைமுறையில் உள்ள இணையதளங்களான www.tnstc.in, www.redbus.in, www.paytm.com , www.busindia.com போன்றவற்றின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்தச் சேவையை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.