கோவை: கோவைக்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, தமிழகம் முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை காவல் ஆணையர் சுமித் சரண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இது பொதுவான எச்சரிக்கைதான், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கோவை முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு மாநகர் முழுவதும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகருக்குள் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என தீவிரமாகத் தேடி வருகிறோம். 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பாதுகாப்பு அளிப்பது, தேடுதல் பணி என இரண்டுமே நடந்துவருவதாகவும் அவர் விளக்கம்அளித்தார்.
கோவை மாநகர் முழுவதுமே உச்சகட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று சுமித் சரண் தெரிவித்தார். மேலும், கோவையில் உள்ள அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், பயங்கரவாதிகளின் புகைப்படம் என்று எதையும் கோவை காவல்துறையினர் வெளியிடவில்லை என்றும், ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் உண்மையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.