மதுரை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, கடந்த 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசித்து வருகிறார். அரசின் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மேலும், கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் அங்கு சிறுநீர் கழிக்க வரும் பொதுமக்கள் தரும் கட்டணம் தான் அவருக்கு வருமானம்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "எனக்கு 65 வயதாகிறது. அரசின் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தத்துடன், பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை வைத்தேன். பலமுறை போராடியும் கிடைக்காததால் பின்னர் விட்டுவிட்டேன். கடந்த 19 ஆண்டுகளாக நான் கழிப்பறையில் தான் வசித்து வருகிறேன்.
கழிவறைகளை சுத்தம் செய்வது தான் வேலை. ஒரு நாளைக்கு 70 முதல் 80 ரூபாய் வரை கிடைக்கும். அதைவைத்து தான் நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், அவர் என்னை வந்து சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. நான் தனிமையில் தான் வசித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவருக்கு அரசின் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.