காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் வியாழக்கிழமை (ஆக. 22) திட்டமிட்டபடி எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காஷ்மீர் பிரச்னையின் காரணமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டம் தில்லியில் திட்டமிட்டபடி நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்க உள்ளன.திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு முன்னின்று இந்த ஆர்ப்பாட்டத்தை வழி நடத்த உள்ளார் என்றார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர். தற்போது, வெளிநாடு செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையைப் பொருத்தவரையில் அரசியல் காழ்ப்புணர்வோடு, இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதாகத்தான் நான் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிறேன். ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர். எனவே, சட்ட ரீதியாக நிச்சயமாக அவர் இதனைச் சந்திப்பார் என்றார் ஸ்டாலின்.