சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் விஷாலின் கால்ஷீட் கிடைத்திருப்பதாக கூறி, தயாரிப்பாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக, இயக்குநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கோத்தாரி (32). இவரிடம், திரைப்பட இயக்குநர் வடிவுடையான் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார். அப்போது தன்னிடம் நடிகர் விஷாலின் கால்ஷீட் கிடைத்திருப்பதாகவும், அவரை வைத்து ரூ.7 கோடியில் திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வடிவுடையான் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி நரேஷ், அந்தத் திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு, 2016 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் மூன்று கட்டங்களாக ரூ.47 லட்சம் வடிவுடையானிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட வடிவுடையான், திரைப்படம் எடுப்பதற்குரிய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நரேஷ், விசாரித்தபோது, நடிகர் விஷாலின் கால்ஷீட் கிடைத்திருப்பதாக போலி ஆவணத்தைக் காட்டி வடிவுடையான் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
வடிவுடையான், தம்பி வெட்டோத்தி சுந்தரம், பொட்டு, சௌகார்பேட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.