சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க புதன்கிழமை பிற்பகல் முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடலோரப் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அப்போது அலைகள் 2.8 மீட்டரிலிருந்து 3.4 மீட்டர் வரை எழக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 21) அதிகாலை முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு 11.30 வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என்றும், மீன்பிடிப் படகுகள், வலைகள், தளவாடப் பொருள்களை பாதுகாப்பான பகுதியில் வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் புதன்கிழமை பிற்பகலிலிருந்து பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் கடலில் குளிக்காமல் நேரடியாக தரிசனத்துக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் புறக்காவல் நிலையத்தினர் அறிவிப்பு செய்தனர். இதனால், கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.