இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக எம்.செல்வராசு எம்.பி., வேதாரண்யம் தொகுதியில் கோடியக்கரை பகுதியில் சென்றபோது அவரை நோக்கி கத்தி வீசப்பட்டுள்ளது.
அந்த கத்தி அவர் மீது படாமல், அருகிலிருந்த வாகனத்தின் மீது விழுந்துள்ளது. இந்தச் செயல் கண்டனத்துக்குரியது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.