புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிட கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, கிரண்பேடி மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் இம்மனுவுக்கு செப். 4-ம் தேதிக்குள் பதிலளிக்க கிரண்பேடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு வழக்கை ஒத்திவைத்தது.