உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்: ப.சிதம்பரம் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கருத்து
உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என ப.சிதம்பரம் விவகாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது; அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு பரிந்துரை செய்தார். இதனால் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இதனிடையே, அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலாக்கத் துறை சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் எனப்படும் தேடப்படும் நபர் என்ற நோட்டீஸை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, "உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்; ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும்.
நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்றார்.