நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திமுக திரும்பப் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் திமுக தொடுத்த வழக்கில் தடை உத்தரவு உள்ளது. அந்த வழக்கை திமுக திரும்பப் பெற்றால் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக கூட்டணியினர் 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை.
பால் விலை உயர்வு கட்டுப்படியாகவில்லை என பால் உற்பத்தியாளர்கள் அவர்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார். உதகையில் அனுமதியின்றி கட்டடங்கள் இல்லாததால் நிலச்சரிவில் பாதிப்பில்லை. அதுபோன்று கட்டடங்கள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.