புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்த வெ.வைத்திலிங்கம், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து சட்டப்பேரவைத் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். சபாநாயகரான சிவக்கொழுந்து, நடுநிலையுடன் செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி உள்ள நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவையில் காங்கிரஸ் 14, திமுக 3, சுயேச்சை உள்ளிட்ட 18 உறுப்பினர்கள் ஆளுங்கட்சி தரப்பிலும், என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, நியமன பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தரப்பிலும் என மொத்தம் 32 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.