பால் விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் கூறினார்.
ராமநாதபுரம் - ராமேசுவரம் பிரதான சாலையில் மகாசக்தி நகர் 9-ஆவது தெருவில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே மந்த நிலையில் உள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் இந்திய பண மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது அனைத்துப் பொருள்களின் விலை உயர்வுக்கும் வழிவகுப்பதாக அமையும். இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். காஷ்மீர் பிரச்னையில் திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிறப்புக் குழு அமைத்து காஷ்மீர் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் பிரச்னையில் அக்டோபர் வரை சிறப்புச் சட்டத்தை செயல்படுத்துவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது. ஆகவே கருத்துக் கேட்புக்குப் பிறகே மத்திய அரசு காஷ்மீர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை என்றார்.