ஆவின் பால் விலையைப் படிப்படியாக உயர்த்தியிருக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அவர் பேட்டி: சட்டப் பேரவையில் பால் முகவர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். கொள்முதல் விலையை ஏற்றினால் பால் விலை உயரும் என முதல்வர் கூறியபோது பேசாமல் இருந்து விட்டனர். அதற்குப் பிறகு இப்போது பொது மக்களைப் பற்றி பேசுகிறார்கள். திமுகவின் இரட்டை வேடம் எப்போதும் போல் பால் விலை உயர்விலும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியலாக்கப்படுகிறது. கொள்முதல் விலையை உயர்த்தும் நடவடிக்கை 4.5 லட்சம் பால் விவசாயிகளுக்கு பலன் தருவதாக இருக்கும். அதேசமயம், பால் விலையை படிப்படியாக உயர்த்தி இருக்கலாம். இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி. கையில் கயிறு கட்டும் விவகாரத்தில் மத நம்பிக்கையும் கலந்திருப்பதால் அதனை ஜாதிய அடையாளமாகப் பார்க்கக் கூடாது என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.