தமிழக அரசு அறிவித்துள்ள பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு போதுமானதல்ல; பால் உற்பத்தியாளர்களுக்கு அது ஏமாற்றமளிக்கிறது என்றார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பொதுச் செயலர் கே. முகமது அலி.
சாலை விபத்தில் உயிரிழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற பெரம்பலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் மேலும் கூறியது:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பசும்பாலுக்கு ரூ. 40 எனவும், எருமைப் பாலுக்கு ரூ. 50 எனவும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.
இதற்காக வரும் ஆக. 27 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பால் உற்பத்தியாளர்களின் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தோம். இந்நிலையில், தமிழக அரசு பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தி ரூ .32 எனவும், எருமைப் பாலுக்கு ரூ. 6 உயர்த்தி ரூ. 41 எனவும் கொள்முதல் விலையை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு போதுமானதல்ல. பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த உயர்வு ஏமாற்றமளிக்கிறது.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கால்நடைத் தீவனங்களின் விலை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
ஆவின் கால்நடைத் தீவனம் 50 கிலோ மூட்டை ரூ. 720- லிருந்து ரூ. 1,200-க்கும் மேல் உயர்ந்துள்ளதற்கு ஏற்றபடி பால் கொள்முதல் விலை உயர்வானது கட்டுப்படியானதாக இல்லை. மேலும், இதர எந்தக் கோரிக்கைகள் குறித்தும் அரசு அறிவிக்கவில்லை. எனவே, தமிழக அரசின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து வரும் 23 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கை, போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம் என்றார் முகமது அலி.
பேட்டியின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.