நெசவாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாமக்கல்லில், தனியார் நிறுவன விழாவில் பங்கேற்க வந்த, மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பதிவுபெற்ற 1,081 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் கைத்தறி ஆதரவு திட்டத்தை ரூ.40 கோடி மதிப்பீட்டில் நெசவாளர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 10 சதவீத அகவிலைப்படி உயர்வு, 10 சதவீத கூலி உயர்வு, 4 சதவீதமாக இருந்த வட்டி மானியமானது, 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். இது கைத்தறி நெசவாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இத் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கைத்தறி, விசைத்தறிகளில் ஜவுளி உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், இலவச வேட்டி-சேலைகள் உற்பத்தியை வழங்கி, நெசவாளர்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஜவுளி உற்பத்திக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ஆண்டுக்கு 9 மாதங்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்கிறோம். மீதமுள்ள, மாதங்களுக்கும் அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
திருப்பூர் பின்னலாடை உள்ளிட்ட பல ஜவுளித் தொழில்கள் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு விற்பனையை எட்டியுள்ளோம். அதிகமாக இருந்த ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு வருவதால், இவ்வாறான சாதனைகளை எட்ட முடிகிறது. கதர் துணி வகைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். கைத்தறி துணிகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.