தமிழகம் முழுவதும் 4. 60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சேலம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பாலின் விற்பனை விலையையும், கொள்முதல் விலையையும் கணக்கிட்டு அரசு, கொள்முதல் விலையில் லிட்டருக்கு பசும்பாலுக்கு ரூ. 4-ம், எருமைப் பாலுக்கு ரூ. 6-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது, பால் உற்பத்தியாளர் ஒன்றிய சங்கங்கள் பல நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சில சங்கங்கள்தான் லாபத்தில் இயங்குகின்றன. இருந்தாலும், அரசு இதையெல்லாம் சமாளித்து, சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீரை பாசனத்துக்காக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதலாக எவ்வளவு தண்ணீர் தேவையோ, அந்த அளவுக்குத் தண்ணீர் திறக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை: புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதில் வெளிப்படைத் தன்மையோடுதான் அரசு இருக்கிறது. அதிமுக அரசைப் பொருத்த வரைக்கும் கல்விக் கொள்கையிலே திடமாக இருக்கிறோம். மொழிக் கொள்கையைப் பொருத்தவரைக்கும், இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றார் அவர்.