சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 2-ஆவது நாளாக தொடர்ந்து மழை
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர், அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.