கண் மருத்துவத்தில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை மருத்துவ மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான மூன்று நாள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் நடைபெறும் கல்பவிருக்ஷா என்ற அக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கண் மருத்துவ மாணவர்கள் பங்கேற்கின்றனர். வெவ்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமர்வுகளில் துறைசார் நிபுணர்கள் பங்கேற்று அதில் உரையாற்ற உள்ளனர். மேலும், கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக சிக்கலான கண் அறுவை சிகிச்சை முறைகள் காணொலிக்காட்சி முறையில் மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் டாக்டர் நம்ரதா சர்மா பேசியதாவது:
புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் இந்த நடவடிக்கைகள் வழிவகுக்கும். கடந்த காலங்களில் தற்போது இருப்பதைப் போன்ற இணையதள வசதிகள் எதுவும் இல்லை. இதனால், அந்த காலகட்டத்தில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், அவர்களது பேராசிரியர்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை. வாய்ப்புகளும், தகவல்களும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி சிகிச்சையின் தரத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல மருத்துவ மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார் அவர். இதில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமங்களின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.