நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆற்றில் காகித தொழிற்சாலையால் ஏற்பட்ட பள்ளமான பகுதிக்கு இரண்டு சிறுவர்கள் சென்றதாக தெரிகிறது. அவர்களை காப்பாற்றுவதற்காக சென்று 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் கிராமம், பெரியண்ணன் கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவருடைய குடும்ப நண்பர்கள் என மொத்தம் ஆறு நபர்கள் இன்று (23.4.2019) காலை காவேரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கியதில், சரவணன், அவருடைய மனைவி ஜோதிமணி, மகன்கள் செல்வன் தீபகேஷ், செல்வன் சாரகேஷ் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி தேவி ஆகிய ஐந்து நபர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
காவேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவேரி ஆற்றில் மூழ்கிய ஹர்சிகா என்பவரை தேடும் பணியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் வருவாய் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைளோடு நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்க செல்லும் போது, காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.