அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்று போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யபட்டு நான்கு வழிச்சாலை, 8 வழிச்சாலை என விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதில் நெடுஞ்சாலைகளை அமைக்கும் அரசு, சாலை பராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கிறது. அவர்கள் சுங்கசாவடிகளை அமைத்துவிட்டு, சாலை பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாததால் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளன. மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எல்இடி விளக்குகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட விளக்குகளை விட அதிக எண்ணிக்கையில் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இதனாலும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள விளக்குகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. நாட்டில் சாலை விபத்து அதிகமாக நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. எனவே விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த முறை இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எல்இடி விளக்குகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட விளக்குகளை விட அதிக எண்ணிக்கையில் விளக்குகள் பொருத்தவதற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதி உள்ளதா, அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடியை கட்டி கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டார் வாகனச் சட்டப்படி அனுமதி உள்ளதா என கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து போக்குவரத்து துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என்றும் வாகனங்களில் தங்களது பதவிகளை பெரிதாக எழுதி கொள்ளவும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.