தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்தக் கிராமத்தில் வியாழக்கிழமை வாக்களித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமம் ஆகும். தேர்தல் வாக்குப் பதிவு
நாளான வியாழக்கிழமை காலை சிலுவம்பாளையம் ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். முன்னதாக சேலத்திலிருந்து சிலுவம்பாளைம் வந்த அவர், தனது தாயார் தவசாயி அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் தனது வீட்டிலிருந்து வாக்குச் சாவடி மையத்துக்கு நடந்தே சென்றார். வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்றதும் அங்கு மற்ற வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார். முதல்வரைக் கண்டதும் பிற வாக்காளர்கள் அவரை வாக்களிக்க வழிவிட்டனர். அவர் அதை நிராகரித்து 30 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.வாக்களித்த பின்னர் வெளியே வந்த முதல்வரை சூழ்ந்து பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் மை வைக்கப்பட்ட கை விரலை உயர்த்திக் காட்டியபடி பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.