தர்மபுரி: இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 6) வெளியாகியுள்ளது.
விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
புதனன்று காலை கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ , 'சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு செயல்படுவது வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு நல்லதல்ல' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் வேண்டாம் என்று கூறப்படுவதை மக்களே ஏற்க மாட்டார்கள்.
மக்களின் மனநிலைக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் ஒருவரையும் மக்கள் மனதில் கொள்ள மாட்டார்கள்.
தமிழக மக்களின் மனநிலை தற்போது ஆளும் அதிமுக அரசுக்கு சாதகமாத்தான் உள்ளது.
இவவறு அவர் தெரிவித்தார்.
சர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக அமைச்சர்ககள் தொடர்ச்சியாக எதிர் கருத்துக்கள் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.