குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்தது.
குற்றாலம் நகர்ப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பனிமூட்டமாகக் காணப்பட்டது; மிதமான சாரல் பெய்தது.
பழைய குற்றாலம், குற்றாலம் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செம்மண் நிறத்துடன் தண்ணீர் சீறிப்பாய்ந்ததால், குளித்துக் கொண்டிருந்தோர் அலறியடித்து ஓடினர். சிறிது நேரத்தில் நீர்வரத்து மேலும் அதிகரித்து அருவிக்குச் செல்லும் நடைபாதையில் வழிந்தோடியது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலையில் நீரின் சீற்றம் தணிந்ததால் பேரருவியின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அகற்றப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.