தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு 5 நாள்களுக்கு நீட்டிப்பு

1st Dec 2017 12:48 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதிமுதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 1ஆம் தேதி கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தாமதமாக நவம்பர் 17ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் இருப்பை கருத்தில்கொண்டு நவம்பர் 30ஆம் தேதிவரை தண்ணீர் திறக்கப்படும்; அதன்பிறகு 15 நாள் கழித்து மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறப்பு மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பாசனத்துக்கு நீர் குறைப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் புயல் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வியாழக்கிழமை காலை நொடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,403 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 75.99 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 38.07 டி.எம்.சி.யாகும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT