பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வருகிற 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்குப் பிறகு தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை அறிவிப்பேன் என வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஒரு வாரத்தில் உலகக் கோப்பை: அவசரமாக நாடு திரும்பும் தென்னாப்பிரிக்க கேப்டன்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவேன். 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவிப்பேன். டெஸ்ட் போட்டிகளில் விரைவில் எனது ஓய்வை அறிவிப்பேன். நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஓய்வு பெறுவேன். எனது ஓய்வு முடிவை 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடருக்குப் பிறகு அறிவிப்பேன். இந்த உலகக் கோப்பை தொடர் வரை மட்டுமே நான் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படுவேன். அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருக்க மாட்டேன்.
இந்த தருணத்தில் எனது கேப்டன்சி எனது ஆட்டத்துக்கு மதிப்பு சேர்ப்பதாக நான் நினைக்கவில்லை. நான் அணிக்காக 10 ஓவர்கள் வீச வேண்டும். அணிக்காக சிறப்பான பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு நான் கேப்டன்சியில் இருந்து வெளிவர வேண்டும். இந்த வயதில் நான் கேப்டன்சியால் ஏற்படும் அழுத்தங்களை எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. நான் வங்கதேச அணிக்காக எனது பங்களிப்பை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்: ககிசோ ரபாடா
உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.