இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் இணையும் டிம் சௌதி!
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலியாவுக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடி காட்டினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மார்ஷ் 96 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்கள் (8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), மார்னஸ் லவுஷேன் 72 ரன்கள் ( 9 பவுண்டரிகள்), அலெக்ஸ் கேரி (11 ரன்கள்), மேக்ஸ்வெல் (5 ரன்கள்), கேமரூன் கிரீன் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் கேன் வில்லியம்சன் விளையாடுவாரா?
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.