வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் மழையினால் முடிவு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இதையும் படிக்க: முக்கிய வீரர்களின்றி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி 34.3 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 76 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிரெண்ட் போல்ட் மற்றும் கோல் மெக்காஞ்சி தலா 2 விக்கெட்டுகளையும், ஃபெர்க்யூசன் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக வில் யங் 70 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், நசும் அகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் அஸ்வின் இருக்கிறாரா?: ரோஹித் பதில்
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.