தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கும், மிடில் ஆர்டரில் களமிறங்குவதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது பெரிய அளவிலான அழுத்தம் இருக்காது எனவும், மிடில் ஆர்டரில் களமிறங்கும்போது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஜியோ சினிமாவில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: 2-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்துக்கு 335 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!
அந்த நேர்காணலில் கே.எல்.ராகுல் கூறியதாவது: நான் ஆரம்பம் முதலே தொடக்க ஆட்டக்காரராக மட்டுமே விளையாடியுள்ளேன். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது ஆட்டத்தை நீங்கள் உருவாக்குவீர்கள். இரண்டாவது பேட்டிங் செய்யும்போதும் உங்களுக்கு இலக்கு என்னவென்று தெரிந்துவிடும். அதனால் தொடக்க ஆட்டக்காரராக பெரிய அளவிலான அழுத்தம் இருக்காது. விக்கெட் மற்றும் ரன் ரேட் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால், மிடில் ஆர்டரில் நீங்கள் பேட் செய்யும்போது ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டியிருக்கும். அதுதான் தொடக்க ஆட்டக்காரருக்கும், மிடில் ஆர்டரில் களமிறங்குபவருக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம். அதிர்ஷ்டவசமாக, ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு நான் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு என்னை மாற்றிக் கொண்டேன். 4-வது மற்றும் 5-வது வீரராக களமிறங்குவதில் மிகப் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கும், மிடில் ஆர்டரில் களமிறங்குவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்றார்.
இந்திய அணிக்காக 23 ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 915 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 43.57 ஆக உள்ளது. தொடக்க ஆட்டக்காரராக அவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 111.
இதையும் படிக்க: பிளேயிங் லெவனில் இல்லையெனில் குறைவாக உணரக் கூடாது: முகமது ஷமி
இந்திய அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,210 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 55.00 ஆக உள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்கி அவர் 3 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.