இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 22) தொடங்குகிறது. இந்த நிலையில், இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எமி ஜாக்சனா இது?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களிடம் அதிக அளவிலான வீரர்கள் இருக்கிறார்கள். நான் தற்போது நன்றாக உணர்கிறேன். எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் முழுவதும் ஆறிவிட்டது. நான் இப்போது 100 சதவிகிதம் முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவேன். இந்த ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறமாட்டார். காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்மித் நாளை நடைபெறும் போட்டியில் களமிறங்குவார். மார்னஸ் லபுஷேன் அணியில் விளையாடுவார். அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடுவார் என நம்புகிறேன். ஆடம் ஸாம்பா அணியில் இருக்கிறார். அவர் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர். விக்கெட்டுகளையும் எடுப்பார். இந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றாக வேண்டும். ஆனால், உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.