என்னுடைய கிரிக்கெட் பயணம் இன்னும் முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக கோப்பையை வென்றது. உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்தபோதிலும், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் தங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (நவம்பர் 23) முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!
மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலுமே வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற டேவிட் வார்னருக்கும் தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு வார்னரை ஆஸ்திரேலியாவுக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டதால் அவர் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டேவிட் வார்னரின் கடைசி ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி என்ற சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்கு, எனது கிரிக்கெட் பயணம் முடிந்துவிட்டது என யார் கூறியது என டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: அதிக பார்வையாளர்களை மைதானம் நோக்கி இழுத்த நடப்பு உலகக் கோப்பைத் தொடர்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹெரண்டிராஃப், சீன் அபாட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேன் ரிச்சர்டுசன் மற்றும் ஆடம் ஸாம்பா.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடும் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கலாம் என இந்த ஆண்டின் முற்பகுதியில் டேவிட் வார்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.