குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், மும்பை அணியின் பந்துவீச்சைப் சிதறடித்து 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக நின்ற சாய் சுதர்ஷன் 43, கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 233 ரன்களை குஜராத் பேட்டர்கள் குவித்தனர்.
அடுத்து ஆடிய மும்பை 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இது குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். அடித்து ஆடுவதற்கு ஏற்ற ஆடுகளம். குஜராத் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர். கிரீன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்கள். பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மொமண்டம் கிடைக்கவில்லை. ஷுப்மன் கில் மாதிரி யாராவது ஒரு பேட்டர் கடைசிவரை விளையாடி இருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் இது விளையாடுவதற்கு நல்ல ஆடுகளம். இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து விசிய பவுலர்கள் இந்தப் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. இன்று விளையாடியதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. குஜராத் அணி நன்றாக விளையாடியது. ஷுப்மன் கில் இதே போல வரும் போட்டிகளிலும் விளையாடுவார் என நம்புகிறேன்.