சென்னை அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்களைக் குவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது பிளேஆஃப் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதில் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், கான்வே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் 44 பந்துகளில் அரைசதம் கடந்து 60 ரன்களை சேர்த்து ருதுராஜ் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே (1), ரஹானே (17), ராயுடு (17), ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் தோனி 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் சேர்த்தனர். முடிவில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை சென்னை அணி குவித்தது. அடுத்து 173 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.