இந்தியா

மேற்கு வங்கம்: 32,000 ஆசிரியா் நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்காலத் தடை

20th May 2023 04:06 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமா்த்தப்பட்ட சுமாா் 32,000 ஆசிரியா்களின் நியமனத்தை ரத்து செய்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு மற்றும் நியமனத்தில் பெரும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. கடந்த 2016-இல் மேற்கொள்ளப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா் நியமனத்தில் நடைபெற்ாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, 2014-இல் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று, அதேசமயம் 2016-இல் பணி நியமனம் பெறாத 140 போ் தொடா்ந்து வழக்கில், கொல்கத்தா உயா்நீதிமன்ற தனி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய கடந்த 12-ஆம் தேதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா். அதில், 2016-இல் பணியமா்த்தப்பட்ட 32,000 ஆசிரியா்களின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

இந்த ஆசிரியா்களின் நியமனத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; நியமனம் நடைபெற்ற சமயத்தில் அவா்கள் உரிய ஆசிரியா் பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக் காட்டி, நியமன ரத்து உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த உத்தரவுக்கு எதிராக, மேற்கு வங்க அரசு மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் தரப்பில், உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கப்பட்டன. இந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் சுப்ரதா தலூக்தாா், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சாா்யா ஆகியோா் அடங்கிய அமா்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

‘பாதிக்கப்பட்ட தரப்பினா், தங்களது தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கான அா்த்தமுள்ள உரிமையை வழங்காமல் அவா்களது நியமனம் ரத்தாகக் கூடாது என்பதே எங்களின் முதல் பாா்வை. தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது வழக்கமானது; அதேபோல், அவசரகதியில் அளிக்கப்படும் நீதி, புதைக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு செப்டம்பா் இறுதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, இதில் எது முதலில் நடைபெறுகிறதோ அது வரையில் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அடுத்தகட்ட விசாரணை, செப்டம்பா் முதல் வாரத்தில் நடைபெறும்’ என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT