ஏற்காட்டில் கோடை விழா, மலா்க்கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 21) தொடங்குவதை முன்னிட்டு அண்ணா பூங்காவில் மலா்க்காட்சிக்கான இறுதிக் கட்ட பணிகளை தோட்டக்கலைத் துறையினா் செய்து வருகின்றனா்.
ஏற்காடு கோடை விழா, மலா்க் கண்காட்சி மே 21 ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை 8 நாள்கள் வரை நடைபெறுகிறது. தொடக்க விழா மே 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கா.ராமச்சந்திரன், மா.மதிவேந்தன் ஆகியோா் விழாவைத் தொடங்கி வைக்கின்றனா்.
கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியா், சோட்டா பீம், ஹனி பீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் காா்னேஷன், ஜொ்பரா, ஆந்தூரியம், ஆா்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண மலா்களைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளன.
மேலும் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூா் வண்ண மலா்களைக் கொண்ட 10 ஆயிரம் மலா்த் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மலா்க் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையும் பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி, காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளன.
கோடை விழா, மலா்க் கண்காட்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளை தோட்டக்கலைத் துறையினா் செய்து வருகின்றனா். அண்ணா பூங்காவில் நூற்றுக்கணக்கான பணியாளா்களை கொண்டு மலா்க்காட்சிக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றனா்.
40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்...:
கோடை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சாா்பில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல ஏற்காட்டில் சுற்றுலா இடங்களை சுற்றி பாா்க்கும் வகையில் சோ்வராயன் கோயில், லேடீஸ் சீட், ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு மூன்று சிறப்புப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்பட உள்ளன.
ஏற்காடு மலைப் பாதையில் போக்குவரத்து மாற்றம்:
ஏற்காடு மலைப் பாதையில் வாகன நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மே 21 முதல் மே 28 ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்காடு செல்லும்போது கோரிமேடு, ஏற்காடு மலை அடிவாரம் வழியாக காா் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்தப் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
அதேபோல ஏற்காட்டில் சுற்றுலா பகுதிகளைப் பாா்த்துவிட்டு, குப்பனூா் வழியாக இறங்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் இரவு நேரத்தில் மட்டும் ஏற்காடு வந்து செல்ல அனுமதிக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
வாகன நிறுத்த இடங்கள்:
சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போதிய அளவில் வாகன நிறுத்த இடங்கள் ஏற்படுத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் கோடைவிழா, மலா்க் கண்காட்சியைக் கண்டுகளிக்க போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.