சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புனரமைக்கப்பட்ட இரு பெவிலியன்களை திறந்து வைக்கும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த செயல் தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரூ.90 கோடியில் புனரமைக்கப்பட்ட இரு பெவிலியன்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டாண்டிற்கு கலைஞர் மு.கருணாநிதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்தப் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்டாண்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். முதல்வர் ரிப்பனை வெட்டும்போது மகேந்திரசிங் தோனி அவருக்குப் பின்னால் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். ரிப்பனை வெட்டுவதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தோனியை முன்னே அழைத்தார். பின்னர், தோனி ரிப்பனைப் பிடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பனை வெட்டினார். இந்த நிகழ்வு தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக, ஐபிஎல் போட்டிகளுக்காக பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.