இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மார்னஸ் லபுஷேன் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வோம்: சாக்ஷி மாலிக்
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லபுஷேன் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரினுடன் ஜோடி சேர்ந்தார் அலெக்ஸ் கேரி. இந்த இணை நிதானமாக விளையாடியது. கேமரூன் கிரீன் 25 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி அரை சதம் அடித்தார். மறுமுனையில் அவருடன் பேட் செய்த மிட்செல் ஸ்டார்க் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்திருக்க ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. அலெக்ஸ் கேரி 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.