ஃபிஃபா நடத்தும் மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அதற்காக 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீா்ந்ததாக சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) தெரிவித்தது.
ரசிகா்களின் வரவேற்பு அதிகரித்திருப்பதால், மகளிா் கால்பந்து விளையாட்டு சரியான திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.
மகளிருக்கான 9-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 20 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் 64 ஆட்டங்கள், இரு நாடுகளிலுள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் அந்த ஆட்டங்களுக்காக 10,32, 884 டிக்கெட்டுகள் விற்றுத் தீா்ந்திருப்பதாக ஃபிஃபா தலைவா் கியானி இன்ஃபான்டினோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, கடந்த 2019-இல் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்காக விற்பனையான டிக்கெட்டுகளைக் காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு எடிஷனில் 24 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த முறை அதைவிட 8 அணிகள் கூடுதலாக பங்கேற்கின்றன.