இந்தியாவில் விளையாடும் டெஸ்ட் தொடருக்கு முன்பு பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் இருப்பது குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல ஆஸி. பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி. இதுகுறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாதது பற்றி ஒரு பேட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
நாங்கள் மைதானத்தில் விளையாடும் வரை பொறுத்திருந்து பார்க்கவும். இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதில்லை என்கிற முடிவு சரியானது என நினைக்கிறேன். கடந்தமுறை வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தை எங்களுக்குத் தந்தார்கள். சுழற்பந்து வீச்சை நாங்கள் அவ்வளவாக எதிர்கொள்ளவில்லை. எனவே பயிற்சி ஆட்டங்கள் எங்களுக்குத் தேவைப்படாது. அதற்குப் பதிலாக எங்களுடைய வலைப்பயிற்சியில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு பயிற்சிகள் எடுத்துக் கொள்கிறோம் என்றார்.