பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் காரணமாக லக்னெள ஆடுகள வடிவமைப்பாளரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளம் அதிர்ச்சியளிக்கிறது என்றார் பாண்டியா. அந்த ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். மேலும் எந்த ஒரு பேட்டராலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியவில்லை.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டுக்கு உகந்தவாறு ஆடுகளம் வடிவமைக்காத காரணத்துக்காக லக்னெள மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக மூத்த ஆடுகள வடிவமைப்பாளரான சஞ்சீவ் குமார் அகர்வால் தேர்வாகியுள்ளார்.