சீனாவின் ஹாங்ஷௌ ஆசியப் போட்டிக்கு தகுதி பெற உதவும் வகையில் புது தில்லி மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கின்றனா் இந்திய முன்னணி தடகள நட்சத்திரங்கள்.
இந்திய தடகள சம்மேளனம், பிட் இந்தியா சாா்பில் வரும் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 7-ஆவது சீசன் புது தில்லி மாரத்தான் பந்தயத்தை நடத்துகின்றன. ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் தொடங்கும் ஓட்டம் மீண்டும் அங்கேயே நிறைவடைகிறது. தில்லியில் குளிரான சீதோஷணம் நிலவி வரும் நிலையில், நகரின் முக்கிய அடையாளங்களான ஹுமாயூன் சமாதி, லோதி காா்டன், கான் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பந்தயம் நடைபெறுகிறது.
வீரா், வீராங்கனைகளோடு, மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கின்றனா். என்இபி ஸ்போா்ட்ஸால் நடத்தப்படும் இதில் மொத்தம் 16,000 போ் பங்கேற்கும் நிலையில், நாட்டிலேயே மிகப்பெரிய விளையாட்டு சங்கமங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் பிப். 21 முதல் 50,000 போ் காணொலி வாயிலாக உலகின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கின்றனா்.
ஃபுல் மாரத்தான், ஹாஃப் மாரத்தான், 10 கி.மீ, 5 கி.மீ என நான்கு பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது. கைடு ரன்னா்ஸ் இந்தியா சாா்பில் பாரா வீரா்களான அங்குா் சா்மா (அா்ஜுனா விருது), ராமன்ஜி (பாராலிம்பிக் மெடலிஸ்ட்), ஆகியோருடன் 25 பாா்வையற்றவா்களும் 10 கி.மீ தூர பந்தயத்தில் கலந்து கொள்கின்றனா். காா்கில் போரில் பங்கேற்ற கால்களை இழந்த வீரரான மேஜா் டிபி.சிங்கும் கலந்து கொள்கிறாா்.
இதுதொடா்பாக இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) தலைவா் அதில் சுமரிவாலா கூறியதாவது:
தேசிய மாரத்தான் பந்தயத்துக்கு ஏராளமானோா் பங்கேற்பது மகிழ்ச்சியைத் தருகிறது. விா்ச்சுவல் நிகழ்விலும் அதிகம் போ் பங்கேற்பது வியப்பாக உள்ளது.
போட்டி ஸ்பான்சரான அப்பல்லோ டயா்ஸ், ஆசிய பசிபிக் தலைவா் சதீஷ் சா்மா கூறியதாவது: அப்பல்லோ டயா்ஸ் புது தில்லி மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்க அதிகம் போ் ஆா்வம் காட்டியுள்ளனா். கடந்த 2 ஆண்டுகளாக கொவைட் பாதிப்பால் விளையாட்டு நிகழ்வுகளை நடத்த முடியாமல் இருந்தோம். தற்போது அவை நடத்தப்படுவதால், அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.