ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 தொடரின் 3-ஆவது மற்றும் இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர்.
பிஞ்ச் 7 ரன்களில் வெளியேற அடுத்த வந்த ஸ்டீவன் சுமித் 9, மேக்ஸ்வெல் 6 ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜோஷ் இங்லிஸ் தன் பங்கிற்கு 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் களமிறங்கிய டேனியல் சாம்ஸ், டிம் டேவிட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
எனினும் டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. டேனியல் சாம்ஸ் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (1) மற்றும் ரோகித் சர்மா (17) ரன்களில் ஆட்டமிழந்தாலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திணறடித்த சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 63 ரன்களில் ஆட்டமிழந்ததும் கடைசி 5 பந்துகளில் இந்திய அணி வெற்றிபெற 5 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியாக ஒரு பந்து மீதமிருக்க ஹர்த்திக் பாண்டியா பவுண்ட்ரிக்கு விளாசி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.
பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது.