மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஜெயவர்தனேவும் ஜாகீர் கானும் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை வகித்த இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே, தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூன்று டி20 அணிகளுக்கான உலகளாவிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ், ஐஎல்டி20யில் விளையாடும் எம்ஐ எமிரேட்ஸ், எஸ்ஏ 20யில் விளையாடும் எம்ஐ கேப் டவுன் ஆகிய மூன்று டி20 அணிகளின் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக ஜெயவர்தனே செயல்படவுள்ளார். மூன்று அணிகளுக்கான பயிற்சியாளர்களின் பணிகள், அணிகளுக்கான வீரர்களின் தேர்வு போன்றவற்றை அவர் கவனித்துக் கொள்வார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநராக இருந்த ஜாகீர் கான், தற்போது மூன்று டி20 அணிகளுக்கான கிரிக்கெட் நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2017 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார் ஜெயவர்தனே. இக்காலக்கட்டத்தில் மும்பை அணி மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றது. ஆறு ஆண்டுகளில் மூன்று முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆகியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
தற்போதைய நடவடிக்கைகளால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.