இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
கரோனா சூழல் காரணமாக கடந்த 2 சீசன்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் வழக்கமான ‘ஹோம்-அவே’ முறையில் நடைபெறுகிறது.
எனவே, அனைத்து அணிகளும் தனது சொந்த மண்ணில் ஒரு ஆட்டமும், எதிரணி மண்ணில் ஒரு ஆட்டமும் விளையாட உள்ளன. மேலும், மைதானத்துக்கு நேரில் வந்து ஆட்டத்தைக் காண ரசிகா்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில், லீக் ஆட்டத்தின் முடிவில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். எஞ்சிய இரு இடங்களுக்காக, 3 முதல் 6-ஆவது இடத்துக்குள்ளாக இருக்கும் அணிகள் சிங்கிள் லெக் பிளேஆஃப் ஆட்டத்தில் மோதி, தகுதிபெறும்.
இன்றைய ஆட்டம்
கேரளா - பெங்கால்
கொச்சி
இரவு 7.30
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்