மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத்துக்குப் பதிலாக மந்தனா கேப்டனாகச் செயல்பட்டார். மேலும் ஷெஃபாலி வர்மா, ராதா யாதவ், மேக்னா சிங் ஆகியோருக்கும் இந்த ஆட்டத்தில் விளையாடுவதிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற கேப்டன் மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய மகளிர் அணி முதல் 3 விக்கெட்டுகளை 20 ரன்களுக்கு இழந்து தடுமாறியது. இதன்பிறகு தீப்தி சர்மாவும் ஜெமிமாவும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். 49 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து தீப்தி ஆட்டமிழந்தார். ஜெமிமா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெமிமா - தீப்தி சர்மா கூட்டணி 81 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க ஐக்கிய அரபு அமீரக பேட்டர்கள் மிகவும் தடுமாறினார்கள். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கவிஷா 54 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
104 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.