2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் தற்போது 7-வது அணியாக ஆப்கானிஸ்தான் அணி நேரடியாகத் தகுதியடைந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 115 புள்ளிகளை அடைந்து 7-ம் இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அபராதம் காரணமாகக் கைவசமுள்ள புள்ளிகளை இழக்காமல் இருந்தாலே நேரடித் தகுதிக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்படாது.
2023 உலகக் கோப்பைக்கு 8 அணிகளே நேரடியாகத் தகுதி பெற முடியும். ஆப்கானிஸ்தானுடன் 7 அணிகள் தற்போது தகுதி பெற்றுவிட்டதால் மீதமுள்ள ஓர் இடத்துக்காக தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 4 அணிகளில் எப்படியும் 3 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடிய பிறகே 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
ஒருநாள் சூப்பர் லீக் விதிமுறைப்படி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற வேண்டுமென்றால் 24 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி (சொந்த மண்ணிலும் வெளிநாடுகளிலும் 4 ஒருநாள் தொடர்கள், ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள்), 13 அணிகளில் முதல் 8 இடங்களைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும்.
தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகளில் எந்த அணி தகுதிச்சுற்று வரைக்கும் போகாமல் நேரடியாகவே தகுதி பெறப்போகிறது?